முன்குறிப்பு: 1980 - ம் வருடத்திற்கு பிறகு பிறந்தவர்களுக்கு இவை புதிதாக இருக்கலாம்!
எங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே எங்கள் வீடு தான் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கும் ஒரே வீடு. எங்களுடையது நீ...ள் சதுரமான மனையில் அமைந்த வீடு. மனையின் ஆரம்பத்தில் ஒரு சிறிய வீடும் அதை தொடர்ந்து பெரிய தோட்டமும் அதன் பின்னால் ஒரு வற்றாத கிணறும் இருந்தது.
இந்த கிணறு தான் எங்களின் நீர் நிலை ஆதாரம். அப்போது வீட்டின் குளியலறையில் ஒரு சிமெண்ட் தொட்டி உண்டு. நான் சிறு குழந்தையாக இருக்கும் போது, என் அம்மா மற்றும் இரண்டு அக்காக்களும் அந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து சிமெண்ட் தொட்டியில் நிறைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
காலம் ஓடியதால் ஏற்ப்பட்ட மாற்றத்தில் சேர்ந்தது, மற்றும் ஒரு தொட்டியும் தண்ணீர் இறைக்க நானும்.
பல சமயம் விரும்பாமலும் சில சமயம் விரும்பியும் நாங்கள் செய்த வேலை நீர் இறைப்பது. ஆனால் நாங்கள் அனைவரும் 'பணி நிறுத்தம்' செய்தாலும் என் அம்மா மாட்டும் முகம் மாறாமல் எங்கள் அனைவருக்கான நீரையும் இறைப்பார்.
பல விடுமுறை நாட்கள் சிமெண்ட் தொட்டியினை சுத்தம் செய்வதில் கழியும்.
அந்தக் காலங்களில் நான், என் அம்மா, மற்றும் அக்காக்களும் ஒன்றாய் இருந்த குடும்ப நேரங்கள் நிறைய. அதில் பலவும் இந்த நீர் இறக்கும் நேரங்கள் தான். கிணற்றில் இருந்த ராட்டினமும், அதன் க்ரீச் ஒலியும், தாம்புக் கயிறும், அதில் மாட்டிய வாளியும், நீண்ட பாரம் சுமந்த நடைகளும், அந்த இரு சிமெண்ட் தொட்டிகளும் என் நினைவில் என்றும் மாறாதவை.
காலம் மேலும் ஓட, இரு அக்காக்களும் திருமணம் ஆகி சென்றனர். அப்போது தான் எங்கள் வீட்டிற்க்கு மோட்டார் பும்ப்பும் குழாயில் நீரும் பாங்கில் வேலை செய்த என் அண்ணனால் வந்தது. ஆனால் அது என் அம்மா உடல் நலம் குன்றி நடை குறைந்த பின்னால் வந்தது எனக்கு இன்று வரை மிகுந்த குறை தான்!
குழாய் நீர் வந்த பிறகு தொட்டிகளுக்கு இருந்த மவுசு குறைந்தது. அவை மெதுவாக புழக்கடைக்கு வந்து, பின்னர் ஒரு பக்கம் உடைந்து, நாளடைவில் யாரும் உணராத ஒரு தருணத்தில் குப்பைக்குச் சென்றன. ஆனாலும், கிணறு அப்படியே இருந்தது. எனக்கு அதன் மேல் இருந்த பாசத்தால் அடிக்கடி சென்று அதை நலம் விசாரித்து வருவேன்.
மேலும் காலம் சுழன்றது. நானும் திருமணமாகி போனபின், அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் பிரியமான கிணற்றையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம், என் மகளையும் உடன் அழைத்துச் சென்று, அவள் அறிந்திராத கிணற்றையும், ராட்டினத்தையும், தண்ணீர் இறைக்கும் முறையையும் காண்பிப்பேன். அவளும் அதை ஆச்சரியமாகப் பார்ப்பாள். அவள் அவ்வாறு பார்க்கும் போதெல்லாம் என் பிரியமான தோழியை அவளுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி கிடைக்கும்.
சமீபத்தில், அந்த கிணற்றைப் பகிர்ந்து கொண்டிருந்து அடுத்த வீட்டுக்காரரின் வேண்டுகோளின் பேரில் என் அப்பா அந்தக் கிணற்றை மூடிவிட்டார். சென்றமுறை வீட்டிற்கு சென்றபோது கிணற்றடியை சென்று பார்த்தேன். ஏனோ, இறந்த என் தோழியின் உடலை பார்ப்பது போலிருந்தது!