திங்கள், 17 ஆகஸ்ட், 2009

நினைவில் நின்றவர்கள் - அய்யங்கார் மாமா

எங்கள் வீட்டின் எதிரே இருந்த லாலா தோட்டம் எனப்படும் பெரிய காம்பௌண்டில் நான்கு சிறிய ஓட்டு வீடுகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் வசித்தவர் தான் அந்த காம்பௌண்டின் care taker ஆக இருந்த அய்யங்கார் மாமா. அவரின் நிஜப்பெயர் யாருக்கும் தெரியுமா என்பது சந்தேகம் தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் 'தாத்தா' தான். ஆனாலும் என் வயதோத்தவரும் என்னைவிட சிறியவரும் கூட அவரை 'அய்யங்கார் மாமா' என்று தான் அழைத்தோம். அவர் அய்யங்கார் மாமா ஆனதால் அவரது மனைவி அய்யங்கார் மாமி ஆனார்.

அந்த நாட்க்களில் எங்கள் வீடுகளுக்கு ஒரு நெய்க்காரர் டின்னில் நெய் கொண்டு வந்து விற்பது வழக்கம். ஆந்த நெய்க்கரர் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கையில் சிறிது நெய்யை கொசுறாக கொடுப்பதும் வழக்கம். எங்கள் வீடுகளில் அவர் அரைக்கிலோ நெய் விற்றால் இரண்டு அல்லது மூன்று கரண்டி நெய் கொசுறாக வந்திருக்கும். ஆனால் அவர் அய்யங்கார் மாமா வீட்டில் அரைக்கிலோ நெய் விற்றால் ஒரு கிலோ நெய் கொசுறாக சென்றிருக்கும்! அவர்கள் வீட்டில் அத்தனை குழந்தைகள்!!

மாமா கடைக்கு சென்று காய் வாங்கும் விதமே அலாதி. அவர் மார்கெட்டிற்கு சென்று முதலில் பார்ப்பது முட்டை கோஸ் விற்கும் கடையை. அந்த கடைக்காரன் விற்ப்பதற்கு முன் வெட்டி போட்டிருக்கும் முட்டை கோசின் மேல் தாள்கள் தான் அவர் வீட்டிற்கு கோஸ் ஆக வரும். அவர்கள் வீட்டில் மெனுவில் பல நாட்கள் கோஸ் 'கரமது' இருக்கும். அதே போல் அவர் கிலோ கணக்கில் எந்தக் காயையும் வாங்கி நாங்கள் பார்த்ததில்லை. எல்லாமே கூறு கட்டி விற்கப்படும் காய்கள் தான்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த அந்த காலங்களில் எங்களுக்கு எப்போதும் வியப்பை தருவது அவர் வைத்திருந்த புகையிலை பெட்டியும் (அந்தக்கால தகர பெருங்காய டப்பா) அவரது நாமக்கட்டி பெட்டியும். அவர் இல்லாத நேரத்தில் அந்த டப்பாக்களை திறந்து நோண்டுவது எங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. அவ்வாறு நாங்கள் நோண்டும் நேரம் அவர் வந்து விட்டால், "ஏண்டா இப்டி அநியாயம் பண்றேங்கோ?" என்று கத்திக்கொண்டு அவர் எங்களை விரட்டுவதும் நாங்கள் அவர் கைகளில் சிக்காமல் ஓடுவதும் அடிக்கடி நிகழும் ஒன்று.

அவருடைய பேரன்களில் ஒருவன் தான் பாய் எனப்படும் பாலாஜி. நான், பாய், மற்றும் ராஜா மூவரும் ஒரே வகுப்பில் படித்தோம். அப்போதெல்லாம் நான் படிப்பில் புலி (மற்ற இருவரோடு ஒப்பிட்டால் என்று படிக்கவும்). அதனால் தினமும் சாயந்திரம் மாமா என் நோட்டு புத்தங்கங்களை வாங்கி சென்று அன்றைய பாடங்களை தனியாக ஒரு நோட்டு போட்டு எழுதி வைத்து பாய்க்கு சொல்லி கொடுப்பார். ஆனால் பாவம், அவர் படித்து தேர்வு எழுதியிருந்தால் கூட அந்த வயதுக்கு பிறகும் பெரிய ஆளாக வந்திருப்பார்.
இவ்வளவு முயற்சி எடுத்தும் அவருக்கு கிடைத்தது என் அம்மாவிடம் இருந்து "புஸ்தகத்த வாங்கிண்டு போய்ட்டாரா பிராம்மணன். இனி நீ படிச்சு உருப்டாப்பலதான். அவன் ஒரு வருஷமாவது fail ஆனா தான் நீ ஒழுங்கா படிக்க முடியும் போலருக்கு" என்ற வசவு தான்.

வருடங்கள் ஓடியதில், பிள்ளைகள் ஒவ்வொருவராக தனி வீடு கட்டிக்கொண்டும், வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கும் சென்ற பிறகு மாமாவும் மாமியும் மட்டும் தனியாக இருக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் அவரது குசும்பும் தோரணையும் சிறிதும் மாறவில்லை. இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு நாள் மாமா இறந்து போனார். அவருடைய பதின்மூன்றாம் நாள் காரியத்திற்கு சமையல் நடக்கும் இடத்தில் கண்டது - அடுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு முட்டை கோசும் சில அழுகிய தக்காளிகளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக